நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரதான சாலையில் இரண்டு மாடுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜன் என்பவரை இரண்டு மாடுகள் சேர்ந்து முட்டித் தாக்கியதில் அவர் நிலை தடுமாறி சாலை நடுவில் விழுந்து உள்ளார். அப்பொழுது அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ஏறி இறங்கியது. இதனால் படுகாயம் அடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் சமீப காலமாகவே அதிகரித்து வருவதால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சாலையில் மாடுகளை திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.