ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் விபத்து நேற்று காலை ஏற்பட்டது. அதாவது அக்டோபர் 15 ஆம் தேதி காலை 8.30 மணியளவில், வேகமாக வந்த  லாரி  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தேநீர் கடையில் மோதியது. இந்த சம்பவம் கெல்வா பகுதியில் நடந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது கடைக்கு வெளியே பலர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். லாரி  திடீரென தடுப்பை உடைத்து சர்வீஸ் பாதையில் நுழைந்து கடையின் மீது மோதியதை சிசிடிவி காட்சியில் தெளிவாக காண முடிகிறது. சில வினாடிகளுக்குள் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடிச் சென்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் தேநீர் கடை முற்றிலும் சேதமடைந்தது. சம்பவத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கனரக வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் காவலில் எடுக்கப்பட்டாரா என்பது இதுவரை தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த மாதம் இதேபோன்ற ஒரு விபத்து மும்பையின் காட்கோபர் பகுதியில் நடந்தது. அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை மோதிய பின்னர் சாலையோர கடைகளில் புகுந்தது. அந்த விபத்தில் நடைபாதையில் வசித்து வந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.