
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது தமிழ் மொழியில் இருந்து தான் கன்னட மொழி உருவானது என்று கூறினார். இது கர்நாடகாவில் சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதோடு கர்நாடகாவில் தக்லைப் திரைப்படத்தை வெளியிட முடியாது எனவும் அறிவித்தனர். இதன் காரணமாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கமல்ஹாசன் என்ன வரலாற்று அறிஞரா.? சமூகத்தில் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குகிறார்.
அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை அப்போதே முடிந்திருக்கும். எனவே மன்னிப்பு கேட்கும் வரை தக்லைப் திரைப்படத்தை வெளியிட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு தற்போது தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, திராவிட மொழிகளின் தாய் தமிழ் மொழி என்பது அனைவருக்கும் தெரியும். கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தவறாக எதுவுமே கூறவில்லை. தமிழ் மொழியிலிருந்து கன்னடம் வரவில்லை என்றால் எதற்காக அதனை பெரிது படுத்த வேண்டும்.
தமிழிலிருந்து கன்னடம் வந்தது என்பதை ஏற்பதற்கு அவர்களுக்கு ஈகோ. தமிழோடு சமஸ்கிருதம் கலந்து உருவானது தான். நடிகர் கமல்ஹாசன் வரலாற்றை படித்தவர். கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எந்தவிதமான தவறும் கிடையாது. கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் இங்கு வந்து தக்லைப் திரைப்படத்தை பார்க்கட்டும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் கமல்ஹாசனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஓடிடியில் தக்லைப் திரைப்படம் வெளியானால் அவர்கள் எப்படி தடுப்பார்கள். இந்த விவகாரத்தில் முதலவர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கமல்ஹாசனை பார்த்து வல்லுனரா என்று கேட்ட நிலையில் நான் கேட்கிறேன் நீதிபதிகளை பார்த்து நீங்கள் என்ன வரலாற்று வல்லுனர்களா.? நீதிமன்றம் தீர்ப்பு தான் தர வேண்டுமே தவிர நாட்டாமை போல் பஞ்சாயத்து செய்யக்கூடாது. தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி உருவாகவில்லை என்றால் முதலில் அதற்கான சான்றுகளையும் ஆதாரங்களையும் காட்டுங்கள் என்று கூறினார்.