நீட் தேர்வு முறையில் தொடர்ச்சியாக முறைகேடுகள் வெளிப்படுவது குறித்து, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது. இந்த தேர்வு முறையே ஒரு முற்றிலும் கோணல் முறை” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நீட் தேர்வைத் தொடர்பாக ஏற்பட்டுள்ள 90 லட்சம் ரூபாய் லஞ்ச முறைகேடு விவகாரம் தொடர்பாகவும் முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகின்றது. மார்க் சீட்டுகள் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன், இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனைக் குறிப்பிட்டும் ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மாநாடுகளில் ஷோ பீஸ் போன்று உட்காரும் அதிமுகவினர், இந்த மிகப்பெரிய கல்வி சீர்கேடுகளைப் பற்றி தங்கள் எஜமானரிடம் பேசவே நேரமோ, மானமோ இல்லை” என்றும் ஸ்டாலின் சாடியுள்ளார். நீட் தேர்வு என்பது மாணவர்களின் தகுதியைப் பரிசோதிக்க வேண்டிய ஒரு தகுதியான முறை அல்ல, மாறாக பணம் மூலம் மார்க் வாங்கும் கருப்பசந்தையாக மாறி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“>

மத்திய அரசின் கீழ் நடத்தப்படும் தேசிய மட்டத் தேர்வில் இத்தகைய பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் நடைபெறுவது, மாணவர்களின் நம்பிக்கையை நிலைகுலைக்கும் வகையிலுள்ளது. மாணவர்கள் சமமாக போட்டியிடும் சூழலை ஏற்படுத்த வேண்டிய அரசு, இப்போது பணக்காரர்களுக்கே வாய்ப்பு வழங்கும் நிலைக்கு சென்றுவிட்டதாகவும், நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.