தலைநகர் டெல்லியில் காரில் சுமார் 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி சிங் என்ற பெண் இறந்த சம்பவத்தில் அவருடன் பின்னால் அமர்ந்துவந்த தோழி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, அஞ்சலி சிங்கின் தோழி நிதி பேட்டி அளித்ததாவது “நானும் என் தோழியும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தோம். அப்போது வண்டியை அவர்தான் ஓட்டினார்.

திடீரென்று நாங்கள் சென்ற வண்டியின் மீது அந்த கார் மோதியது. இதனால் என் தோழி காருக்கு முன்னால் சிக்கிக்கொண்டார். இதற்கிடையில் காரில் இருந்தவர்களுக்கு யாரோ சிக்கிக்கொண்டனர் என தெரிந்தது. எனினும் அவர்கள் அஞ்சலி சிங் மீது காரை ஏற்றினர். மேலும் என் தோழி காருக்கு அடியில் மாட்டிக்கொண்டு அலறி துடித்தார்.

ஆனால் அவர்கள் காரை முன்னும் பின்னும் நகர்த்தி விட்டு வேகமாகச் சென்றனர். இதன் காரணமாக அவளால் தப்பிக்க முடியவில்லை. மேலும் அஞ்சலி சிங் மது அருந்தியிருந்தார் எனவும் அதனால் வண்டியை அவரை ஓட்டவேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது” என்று அவர் பேட்டியில் கூறினார்.

இந்த நிலையில் டெல்லி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் தன் டுவிட்டர் பக்கத்தில் “தனது தோழி விபத்தில் சிக்கியதை பார்த்தும் அவருக்கு உதவாமல் வீட்டுக்கு சென்ற நிதி சொல்லும் வார்த்தைகளை எப்படி நம்புவது. நிதி கூறியது போல் அஞ்சலி சிங் மது அருந்தியிருந்தாரா எனவும் தெரியவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு இதனையெல்லாம் நிதி சொல்வது அஞ்சலியின் நடத்தையை படுகொலை செய்வதற்கு சமம். STOP VICTIM SHAMING” என குறிப்பிட்டு இருக்கிறார்.