
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் அவர்களுக்கு சின்னச்சாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதற்கு முன்பு ஏர்போர்ட்டில் இருந்து அவர்கள் வாகனத்தில் சென்ற நிலையில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும் போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கர்நாடக போலீசார் ஏற்கனவே பேரணி நடந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அனுமதி வழங்க முடியாது என்று கூறி இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஆர்சிபி கிரிக்கெட் நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெங்களூர் மாநகர கமிஷனர் பி. தயானந்தா உட்பட சில மூத்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்வர் சித்த ராமையா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பெங்களூரூ மாநகர புதிய கமிஷனர் ஆக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சிமந்த் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மறு உத்தரவு வரும் வரையில் கூடுதல் டிஜிபி மற்றும் கமிஷனராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.