நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்து வருகிறார்.

நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும் தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் 30 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட 14 பெருநகரங்களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்களை உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.