
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பாணாங்குளம் பகுதியில் உள்ள நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், இரு சொகுசு கார்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன. இதில், ஒரு ஆடி கார் மீது இருவர் இருக்கையிலிருந்து வெளியே, காரின் டாப்பில் அமர்ந்து செல்போனைப் பார்த்தபடியும், கைகளை அசைத்து உற்சாகமாகவும், காரில் பயணம் செய்தனர். மேலும், இன்னொரு காரில் இருந்தவர், கதவைத் திறந்து தொங்கியபடி தனது நண்பர்களுக்கு சைகை காட்டியதையும் காணலாம். இந்த மோசமான செயலைப் பார்த்த பிற வாகன ஓட்டிகள் பயந்து வாகனங்களை மெதுவாக்கினர். சிலர் ஓரமாக வாகனங்களை நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததில், தற்போது அந்தக் காணொளி வைரலாக பரவி வருகிறது. இதனைக் காணும் மக்கள், வாலிபர்களின் பொறுப்பற்ற மற்றும் அபாயகரமான செயலைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார், “அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்” மற்றும் “பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்துதல்” ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்து, சம்பந்தப்பட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர். மேலும், இதே சாலையில் கடந்த இரண்டு மாதங்களில் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.