ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனப்பகுதியில் உள்ளது மணல்மேடு. இதில் உள்ள தூரம் மொக்கை எனும் பகுதியில் கனகராஜ்(44) என்பவர் தனது மனைவியைப் பிரிந்து வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் மீன் பிடித்து வந்தார். அதோடு ஆடுகளும் மேய்த்தார். அதேபோன்று அருகில் உள்ள குடிசையில் அவருடைய தந்தை கருப்புசாமி, தாய் குழந்தை அம்மாள் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கனகராஜ் மற்றும் அவரது பெற்றோரும் அவர்களது குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியது. அந்த காட்டு யானை தூரம் மொக்கை பகுதிக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கனகராஜ் தூங்கிக் கொண்டிருந்த குடிசையை சூறையாடியது.
இதனால் சத்தம் கேட்டு கனகராஜ் எழுந்து பார்த்த போது அருகே காட்டு யானை நின்று கொண்டிருந்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கனகராஜை யானை காலால் மிதித்தது. இதில் கனகராஜ் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து வலி தாங்க முடியாமல் அலறிய கனகராஜின் குரலை கேட்டு, அவரது பெற்றோர்களும் அக்கம் பக்கத்தினரும் விரைந்து வந்து அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கனகராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.