தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவர் விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியில் அலெக்ஸ் பாண்டியன்(25) என்பவர் வசித்து வருகிறார். நண்பர்களான இருவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். சமீபத்தில் அலெக்ஸ் பாண்டியனுக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பேசாமல் இருந்தனர்.

கடந்த 3-ஆம் தேதி அலெக்ஸ் பாண்டியன் சரவணனின் வீட்டிற்கு சென்று நாம் நல்ல நண்பர்களாக இருந்தோம். இப்போது பேசிக் கொள்வதே இல்லை. சமாதானமாக சென்று விடுவோம் என கூறி மது குடிக்கலாம் வா என மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனை சரவணன் தம்பி சசிகுமார் பார்த்துள்ளார்.

நண்பர்களுக்கு இடையே உள்ள முன் விரோதத்தை அறிந்த சசிகுமார் அவர்களை பின்தொடர்ந்து சென்று பார்த்தார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரைப் பகுதியில் வைத்து அலெக்ஸ் பாண்டியனுக்கும், சரவணன் என்பவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த அலெக்ஸ்பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனின் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சசிகுமார் ஓடிவந்ததும் அலெக்ஸ் பாண்டியன் அங்கிருந்து தப்பி சென்றார்.

பின்னர் படுகாயமடைந்த சரவணன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.