இயக்குனரும் நடிகருமான திரு மாரிமுத்து அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி :

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குனரும், பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்திலிருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து பல்லாண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்து இயக்குனர் ஆனவர் திரு. மாரிமுத்து அவர்கள். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர்.

மேலும் சின்னத்திரையிலும் தனது நடிப்பு திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராக புகழ்பெற்றார். மேலும் பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.