கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கூலி தொழிலாளியான வெங்கடேஷ் (38) என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி ரூபா (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 3 மாதங்களாக தன் மனைவியின் நடத்தையின் மீது வெங்கடேசுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால் அவர் தன் மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ரூபா கோபத்தில் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சில நாட்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குழந்தைகளுடன் இருந்த நிலையில் ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கும் சென்றார்.

தினசரி தன் மனைவி வேலைக்கு செல்லும்போதெல்லாம் வெங்கடேஷ் வழி மறித்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அதனை ரூபா கண்டு கொள்ளாத நிலையில் நேற்று காலை ஹோட்டலுக்கு வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது வழிமறித்த வெங்கடேஷ் தன்னுடைய மனைவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடி துடித்த ரூபா பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இது குறித்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் வெங்கடேஷை தேடிவரும் நிலையில் தற்போது தாயை இழந்து தந்தையும் இல்லாமல் குழந்தைகள் பரிதாபமான நிலையில் இருப்பது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.