
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தோனி இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் அணியின் வெற்றிக்காக ஒழுங்காக விளையாடவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. இதனை அடுத்து தோனி ஓய்வு பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப், “தோனி எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும். விக்கெட் கீப்பருடைய வயது 35 தான். அதற்கு நானே ஒரு உதாரணம். நான் ஒரு வீரராக விளையாடும்போது உச்சகட்டத்தில் விளையாடவில்லை என்றால் என்னுடைய மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்திக்கும்.
நீங்கள் 15 ஆண்டுகாலம் சிறப்பாக விளையாடினாலும் இளம் தலைமுறைகள் பார்த்து ஈர்க்கப்பட மாட்டார்கள். 2019 ஆம் வருடம் ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் தோனியால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அவர்கள் அப்போது அதை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒரு வீரருக்காக ஒரு அணியை விடுவது என்பது இந்த விளையாட்டுக்கு செய்யும் அநீதி. அப்படி செய்தால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருக்கும். நான் இரண்டு மூன்று சிஎஸ்கே போட்டிகளை பார்த்தேன். தோனி வரும்போது பெரிய சத்தம் எழுந்தது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு இப்போது புள்ளிகள் தான் முக்கியம். ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் தான் இது நடக்கிறது என்றால் நீங்கள் இந்த நேரத்தில் என்ன அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.