தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்துள்ள நவீன உலகில், பல்வேறு துறைகளில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்து வருகின்றது. வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என பல இடங்களில் மனிதர்களின் பணிகளை தானாகவே செய்து முடிக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் சீனாவின் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த ரோபோ மிகவும் ஆக்ரோஷமாக மாறி திடீரென அங்கிருந்த ஊழியர்களை தாக்கத் தொடங்கியது. அதனைப் பார்த்த தொழிலாளர்கள் சிலர் பயந்து ஓடியதுடன், அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் ஓரமாக நின்றனர். அந்த ரோபோ தனது கைகளை மற்றும் கால்களை வேகமாக அசைத்து, வேகமாக செயல்பட்டது. உடனடியாக மற்றொரு ஊழியர் விரைந்து வந்து ரோபோவை நிறுத்தியதாலும், அதனால் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பதிவானது முதலே, அது வைரலாகி பலரும் அதிர்ச்சியுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். “சிறிய கோடிங் தவறுகள் கூட எந்தளவுக்கு ஆபத்தாக மாறும் என்பதை இது காட்டுகிறது” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு நபர், “மனிதர்களால் உருவாக்கப்பட்ட ரோபோ, நம்மையே தாக்கும் நிலைக்கு வந்துவிட்டது; இது நம்மை நாமே அழிக்க உருவாக்கிய தொழில்நுட்பம் போல் உள்ளது” என கவலையுடன் பதிவிட்டுள்ளார்.