
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு கணவன் மனைவி இருவரும் தூங்குவதற்காக சென்றனர். பின்னர் நேற்று அதிகாலை திடீரென பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த அமராவதியை காணவில்லை என கணவன் பதறிப் போய் தேடினார். அப்போது அவர் வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த கணவன் தன் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதற்கிடையில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையும் அசைவின்றி கிடந்ததால் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது குழந்தையும் உயிரிழந்தது தெரிய வந்தது.
இருவரின் உடலிலும் காயங்கள் எதுவும் இல்லாததால் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அமராவதி தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே எதுவும் பிரச்சனை இல்லை என்று கூறப்படும் நிலையில் அமராவதி தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.