தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை பகுதியில் உள்ள விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவரது பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அந்த நபரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்பு அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன்(30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.