தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஏழை குழந்தைகளின் ஒரே ஆயுதம் கல்விதான். தமிழக பாஜக தொடங்கி வைத்துள்ள கையெழுத்து இயக்கம் 12 லட்சத்தை தாண்டி செல்கிறது. பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்க நினைக்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் காமராஜர் பள்ளிகள் என்ற பெயரில் தொடங்கப்படும். அதன் பிறகு மகளிருக்கும் மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும்.

தீய சக்திகளின் கூடாரமாக திமுக மாறியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. பெண்கள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் வரை பதற்றத்துடன் இருக்கிறார்கள். நாட்டை காப்பாற்ற வேண்டும் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் பெண்களை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்து விட்டது. ஊழல் கறை படியாத இடமே கிடையாது. தவறாக சொத்து சேர்ப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் மரியாதை கொடுக்கிறார்கள். எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் பொருட்களை பிரதமர் மோடி பரிசாக கொண்டு சென்று பெருமை சேர்த்து வருகிறார். மேலும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் தொகை அதிகரித்துவிட்ட நிலையில் இனி கல்வி கற்றவர்கள் மட்டும் தான் நாட்டை ஆள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை பாஜக கொண்டுள்ளதாக கூறினார்.