
திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான் என்பவருடன் கடந்த மாதம் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. முகமது இம்ரான் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்த தம்பதியினர் கடந்த 7 ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் மதுரையிலிருந்து திருப்பூருக்கு வந்திருந்தனர். அங்கு அனீஸ் தனது குடும்பத்தினருடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய நிலையில் வீட்டில் இருந்தார். அதன்பின் சில பொருள்கள் வாங்குவதற்காக தனது கணவருடன் அருகில் உள்ள மளிகை கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அனீஸின் சேலை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால் கீழே விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக அனீஸை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்க அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
அதன் பின் அவரது நிலைமை மோசமாக இருந்ததால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து 20 நாளிலேயே புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.