அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் 21 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளார். வருகிற தை மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறி ஊசி போட்டுக் கொண்ட சிறுமி இரவு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இது வெளியே தெரிந்தால் தன்னை தவறாக நினைப்பார்கள் என கருதி சிறுமி கழிவறைக்கு பின்புறம் இருக்கும் குப்பை குழியில் குழந்தையின் உடலை புதைத்து விட்டு வீட்டிற்கு வந்து தூங்கினார்.

அதிகாலை வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் வாலிபர் மற்றும் சிறுமியின் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.