பீகாரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பெங்களூருவுக்கு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநில எல்லைகளை கடந்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21-ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே ஒரு நீல நிற ட்ராலி பேக்கில் சிறுமியின் சடலம் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கிடைத்தது.

அதைப் பார்த்த குப்பை சேகரிப்பவர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில், புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவ, பீகார் மாநிலம் நவாதா மாவட்டத்திலிருந்து கடந்த மே 15ம் தேதி மாயமான சிறுமி ரியா என்பவராக சடலம் அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து, ஹிசுவா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த அவரது தந்தை நிர்மல் தாஸ் பெங்களூரு வந்து தனது மகள் தான் என்பதை உறுதிப்படுத்தினார். பிரேத பரிசோதனையில், சிறுமி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், கழுத்து எலும்பு முறிந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த கொலை வழக்கில், ஹிசுவா கிராமத்தைச் சேர்ந்த ஆஷிக் குமார் என்பவர், சிறுமியின் பாய் பிரண்டாக இருந்ததாகவும், ஏற்கனவே திருமணமானவர் என்பதும் தெரியவந்தது. கடந்த மே மாதத்தில் அவர் பீகாரில் இருந்து ரியாவை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று, ஒரு வீட்டில் தங்கியுள்ளார்.

பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து சடலத்தை ட்ராலி பேக்கில் அடைத்து, இரவில் சந்தாபுரா ரயில்வே பாலத்திற்கு கொண்டு சென்று வீசியுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவத்தில், ஆஷிக் குமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகார் மற்றும் பெங்களூரு போலீசார் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏன் இந்த அளவுக்கு ஒரு சிறுமியை 2,400 கி.மீ தூரத்திற்கு கடத்திச் சென்று கொலை செய்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.