சென்னை ஆதம்பாக்கத்தில் புதிய திருமணமான ஷாலினி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கியைச் சேர்ந்த ஜெகன்நாதன் (30) என்பவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மே 28ம் தேதி, வந்தவாசியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரி ஷாலினி (26) என்பவருடன் நங்கநல்லூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின், இருவரும் செஞ்சி மற்றும் வந்தவாசிக்கு சென்றுவிட்டு ஜூன் 6ம் தேதி சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பினர்.

அன்று மதியம், ஷாலினி தலைவலியாக இருப்பதாக கூறி ஜெகன்நாதனிடம் மாத்திரை வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டார். ஜெகன்நாதன் மாத்திரை மற்றும் உணவுகள் வாங்கி கொடுத்துவிட்டு அருகிலுள்ள தனது சகோதரி விஜயா வீட்டிற்கு சென்றார். பின்னர், மதிய உணவிற்கு அழைக்க பலமுறை ஷாலினிக்கு தொலைபேசியில் அழைத்தும் பதில் கிடைக்காததால் சந்தேகமடைந்து வீடு திரும்பினார். கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்க்கையில், ஷாலினி தூக்கில் தொங்குவது தெரிய வந்தது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆதம்பாக்கம் போலீசார் வீட்டுக்கு வந்து கதவை உடைத்து ஷாலினியை மீட்டு வேளச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஷாலினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணமாகி 9 நாட்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,  இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.