திருப்பதி லட்டு பிரசாதம் மீதான சர்ச்சை, அதன் தெய்வீகத்தன்மை மற்றும் தூய்மையைக் குறித்த விவாதங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருந்தது உண்மையென திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல் அளித்ததையடுத்து  ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டபோதும், பக்தர்களின் கோபம் உச்ச கட்டத்தை எட்டியது.

இந்த பரபரப்பைச் சமாளிக்க திருப்பதி தேவஸ்தானம் விரைவாக நடவடிக்கை எடுத்தது. தேவஸ்தானத்தின் சமீபத்திய அறிவிப்பின் படி, லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டதாகவும், தற்போது அவை களங்கமின்றி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தேவஸ்தானம், லட்டு பிரசாதத்தின் தெய்வீகத்தன்மையை நிரந்தரமாகப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது.

மேலும், தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் கூறுகையில், லட்டு தயாரிப்பில் கலப்படம் செய்த நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரரை தடுப்புப் பட்டியலில் சேர்க்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.