கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடவுள் பெயர்களை அரசியல் செய்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, திமுக தான் தமிழகத்தில் மதம் மற்றும் கடவுள் பெயர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

விநாயகர் சிலையை உடைத்தது யார்.? ராமர் என்ன பட்டம் பெற்றார் என கேட்டது யார்.? கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசி வேடிக்கை பார்த்தது யார்.? சட்டமன்றத் தேர்தலில் இனி உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும். ஏனெனில் 5 வருடங்களில் எந்த மாற்றமும் நடக்காது. சனாதன தர்மத்தை காக்க வேண்டும் என்றால் சிந்திக்க வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது திருநீறு பூசி ருத்ராட்சம் அணிந்து செல்ல வேண்டும். இதை சொல்லும்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறு பிள்ளை போல் பேசுகிறார். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் சீருடை கொண்டுவரப்பட்டது.

ஆனால் இந்த சீருடை மது அடையாளங்களை மறைப்பதற்காக கொண்டுவரப்படவில்லை. ஒரு பெண் பள்ளிக்கு பொட்டு வைத்துக் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்ற முடியும். எப்படி இந்து மத தர்மத்தை பின்பற்றி சனாதன தர்மத்தை காக்க முடியும். பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது பொட்டை அழித்துவிட்டு மீண்டும் பள்ளியை விட்டு வெளியே வந்த பிறகு பொட்டு வைத்துக் கொண்டால் நமக்கும் திருமாவளவனுக்கம் என்ன வித்தியாசம். நாம் அனைவரும் சமம் அனைத்து சாதிகளும் சமம் என்று நினைப்பவர்கள். எனவே மத அடையாளங்களை பின்பற்றுவதில் தவறு இல்லை என்பதை தமிழக அரசுக்கு உணர வைக்க வேண்டும்.

மேலும் திருநீறு பூசக்கூடாது, ருத்ராட்சம் போடக்கூடாது என்று கூறுவது மதசார்பின்மை கிடையாது. இது ஒரு மதத்தை காலில் போட்டு மிதிப்பது போன்றது. குழந்தைகளுக்கு இன்னொரு மதமும் அதாவது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் போன்றவைகளும் முக்கியம் என்பது தெரிய வேண்டும் என்றார்.