விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வரை நிதி தர மாட்டோம் என அவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் அனைத்து கட்சிகளையும் அரவணைக்க வேண்டும்.

கூட்டணிக்கு தலைவராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் எங்களோடு உரையாடும்போது கூட்டணியின் நலனை கருத்தில் கொண்டு தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்போம். நாங்கள் இந்த கூட்டணியில்தான் இருப்போம். திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் நிலையில் அதற்கு கண்டிப்பாக வாய்ப்பே இல்லை. திமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட வெளியேற வாய்ப்பு இல்லை.

அவர்களுக்கு திமுக கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை என்ற கவலை இருக்கிறது. பாமக கட்சி விவகாரம் அவர்களது உள்கட்சி பிரச்சனை என்பதால் அதைப் பற்றி கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. முருக பக்தர்களை பாஜக ஆதரவாளர்களாக மாற்றுவதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சேர்ந்து முயற்சி செய்கிறது.

அரசியல ஆதாயத்திற்காக தான் இந்த மாநாட்டினை நடத்துகிறார்கள். அவர்கள் வள்ளுவரையும் சனாதனப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஐயப்ப பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் மத சார்பற்றவர்களாக இருப்பார்கள். மேலும் தமிழ்நாட்டில் நீங்கள் மதத்தின் பெயரால் ஆதாயம் தேட முடியாது. மதத்தின் பெயரில் வன்முறைகளை செய்ய முடியாது என்று கூறினார்.