
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை மத்திய பாஜக அரசு கையாண்டு வருகிறது. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் அவர்கள் நலம் என்ற பெயரில் மத்திய பாஜக அரசு இந்துக்களை அணி திரட்டுகிறார்கள்.
அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான ஆட்சி அதிகாரத்தை முழுமையாக உபயோகப்படுத்தி வருகின்றனர். சட்டத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்கள்.
முத்தலாக், வக்பு திருத்த சட்டம் மத சார்பின்மைக்கு அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால் அரசு அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத சார்பின்மை காப்போம் பேரணி 14- ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது.
மதவாதத்திற்கு இடம் தராத ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மண்ணாக தமிழ் மண் தமிழ்நாடு இருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஒரு பெரிய இலக்காக வேண்டி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்காக முருகவேல் யாத்திரை, முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர்.
தலைமை தாங்கி இருக்கும் கட்சியுடன் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அந்த நேரத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை அடிப்படையில் இருக்கிறது. நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. எதிர்பார்ப்பு என்பது எல்லாம் தேர்தலிலும் இருக்கிறது. கூட்டணியில் நலம் முதன்மையானது.
திமுகவுக்கு எப்படி கூட்டணி பொறுப்புள்ளதோ அதேபோல கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்பதை நெடுங்காலத்திற்கு முன்பு நிலைப்பாடாக வைத்திருக்கிறோம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிடமிருந்து கூடுதல் சீட் கேட்போம். அதிமுகவால் வெளியில் உள்ளவர்களையே இணைக்க முடியவில்லை. அமித்ஷா கூட்டணிக்காக இரண்டு முறை வந்து சென்றார். ஆனாலும் அதிமுக இன்னும் வடிவம் பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை எனக் கூறியுள்ளார்.