பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா பகுதியில் இரண்டு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை செயல்பட்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடம் மரப்பலகை அதிகம் கொண்ட கட்டிடம் என்பதால் தீ மிகவும் வேகமாக பரவியது. இந்த கட்டிடத்தில் இருந்த 18 பேர்களில் மூன்று பேர் மட்டுமே பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பியுள்ளனர். மீதம் 15 பேரும் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும் அடங்குவார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.