ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் இந்திய அணியில் தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்படாதது தொடர்பாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, தமிழக வீரர்கள் இரு மடங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டும்தான் வாய்ப்பு கொடுப்போம் என்று பாரபட்சம் காட்டுவது ஏன். பிற மாநில வீரர்களை போன்று தமிழக வீரர்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்காதது ஏன். தேர்வு குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதிலும் அவர்கள் இது பற்றி கேள்வி எழுப்பவில்லை. டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற சூழலை நான் பலமுறை எதிர்கொண்டுள்ளேன். மேலும் இதனை யாரும் வெளிப்படுத்தவில்லை என்பதால் தான் தற்போது இதைப் பற்றி நான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.