உத்தரபிரதேச மாநிலத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் கொடூரமான சாலை விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது. சிஹானி கேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் மீது வேகமாக வந்த தார் கார் மோதியது. இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

விபத்தில் சிக்கியவர் பருல் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளில், அவர் சாலையின் ஓரமாக நடந்து செல்வது தெரிகிறது. அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த கருப்பு நிற கார், பின்புறம் இருந்து மோதி, அவரை காரின் பானட்டில் தூக்கி வீசுகிறது. தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்தப் பெண் சில மீட்டர் தூரம் தள்ளப்பட்டு கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார்.

 

சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் துரிதமாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பாதிக்கப்பட்ட பருல் குப்தாவை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்துக்குப் பிறகு, கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாகவும், அவரை பிடிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக சிஹானி கேட் காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்,  கார் ஓட்டுநருக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. அவர் தமது வீட்டின் கதவைத் திறக்கக்கூட மறுத்துவிட்டார். மேலும் இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்க அவர் ஒத்துழைக்கவில்லை” என்று தெரிவித்தனர்.