
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில வினாடிகளில் வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டதில் 241 பயணிகள் உயிரிழந்தனர். 242 பேர் மொத்தம் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
இந்த விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்ததால் மருத்துவ மாணவர்களும் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் உடல் கருகி அடையாளம் தெரியாத அளவிற்கு இருப்பதால் டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு முழுமையான இறப்பு குறித்த தகவல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்து விமானங்களின் நிலை குறித்து அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் உள்ள புகேட் பகுதியில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னைக்கு புறப்பட்ட நிலையில் திடீரென அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் தாய்லாந்தில் வைத்து அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. மேலும் 156 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்ட நிலையில் அவசரமாக பயணிகள் அனைவரையும் தரையிறக்கி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.