ரஷ்யாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில், 31 வயதுடைய பெலாரஸைச் சேர்ந்த சுற்றுலா பயணியொருவர், 1 1/2 வயது குழந்தையை தூக்கி தரையில் மோதிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் கர்ப்பிணியான தாய் தள்ளுவண்டியை எடுக்க சற்றே விலகியிருந்தபோது, வ்லாடிமிர் வித்‌கோவ் (Vladimir Vitkov) எனும் அந்த நபர், திடீரென குழந்தையை தூக்கி தரையில் வீசியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது குழந்தை கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

சம்பவம் நடப்பது முழுவதும் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், குற்றவாளியின் இரத்தத்தில் கஞ்சா போதைப் பொருள் தடயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் கூடுதலாக போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் போது, “என்னால் தவறுகள் நடந்திருக்கலாம்” என அவர் பதிலளித்துள்ளார். அவர் சமீபத்தில் சைப்ரஸ் அல்லது ஈஜிப்திலிருந்து ரஷ்யாவிற்கு வந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மாஸ்கோ பகுதியின் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் க்செனியா மிஷோனோவா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். “மயக்க மருந்து போதையில் ஒரு கொடூரன், விமான நிலையத்தில் குழந்தையை தரையில் மோதியுள்ளான். இது தாங்க முடியாத மன வேதனையை ஏற்படுத்துகிறது.

குழந்தையின் பெற்றோருக்கு மன உறுதி கிடைக்க வேண்டும்” என அவர் உருக்கமாக தெரிவித்தார். வித்‌கோவ் தற்போது கைது செய்யப்பட்டு “கொலை முயற்சி” குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வித்‌கோவுக்கு இதே வயதுடைய மகளும் இருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.