தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பல்வேறு தொழில்நுட்பப் பதவிகளில் மொத்தம் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணித் தேர்வை நடத்தவுள்ளது.

டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ். கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (Electrical) உள்ளிட்ட 58 வகையான பதவிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 12, 2025 ஆம் தேதிக்குள் www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுகள் கணினி வழியாக (CBT) ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 , செப்டம்பர் 11 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இது ITI மற்றும் டிப்ளமா தகுதியுடன் கூடிய தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான வாய்ப்பாகும். தேர்வு, துறை வாரியாக வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு கருவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் மட்டும் 656 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதோடு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் எலக்ட்ரீஷியன், வெல்டர், டீசல் மெக்கானிக், ஏசி மெக்கானிக், ஸ்டீல் மெட்டல் டிரேட்ஸ்மேன் போன்ற டெக்னீசியன் பதவிகளில் 537 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய போக்குவரத்துக் கழக பணிகள் முதல் முறையாக TNPSC வாயிலாக நிரப்பப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து மேலதிக காலியிடங்கள் வருவதால், கலந்தாய்வுக்கு முன் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.