தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமனம் செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தமிழக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ராஜேஷ்குமார் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற குழு தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரசின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ் அழகிரி பதவி வகித்து வந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு கே.எஸ் அழகிரி ஆற்றிய பணியை பாராட்டுவதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்-இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ் அழகிரி அவர்களது எதிர்காலப் பணிகள் சிறக்கவும் – காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம்! #INDIA-வை வெற்றிபெறச் செய்வோம்!” என தெரிவித்துள்ளார்.