
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு அதிகபட்ச வெப்பநிலை தமிழகம் மற்றும் புதுவையில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரையில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.
மேலும் இன்று மத்திய வங்கக் கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அனேக பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.