தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது கடந்த சட்டசபை கூட்ட தொடரின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு ஊழியர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தாலோ அல்லது விபத்தினால் நிரந்தரமாக ஊனமடையும் சூழல் ஏற்பட்டாலோ அவர்களுக்கு தனிநபர் காப்பீடு தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் திருமண வயதில் மகள் இருந்தால் திருமண செலவுகளுக்காக ஒரு பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலும் ஒருவேளை 2 மகள்கள் இருந்தால் மொத்தம் 10 லட்ச ரூபாய் வரையிலும் திருமண செலவுகளுக்காக பணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதேபோன்று அவர்களின் குடும்பத்தில் உயர்கல்வி செல்லும் மகள் இருந்தால் அதாவது பெண் இருந்தால் உயர்கல்வி படிப்பு செலவுக்காக 10 லட்ச ரூபாயும், பணியில் இருக்கும் போதே அரசு ஊழியர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீடு தொகையாக வங்கிகள் மூலம் 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக கனரா வங்கி, எஸ்பிஐ, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, ஆக்சீஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய 7 வங்கிகளுடன் காப்பீடு தொடர்பாக தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் தற்போதுள்ள நடப்பு வங்கி கணக்கினை இந்த புதிய திட்டத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும் எனவும் அதற்கான படிவத்தினை முறையாக பூர்த்தி செய்து வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ஊழியர் ஐடி கார்டு சேலரி ஸ்லிப் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சுற்றறிக்கை எஅந்தெந்த மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் சார் ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.