சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது  செப்டம்பர் 15 முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக தற்போது இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின், நாளை பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.15ம் தேதி அண்ணா பிறந்த நாளில், மகளிர் உரிமை தொகை திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதனையொட்டி, பயனாளிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளன.