மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகளுக்கும் விமான நிறுவன ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 13, 2026 அன்று, பாக்டோக்ராவிலிருந்து டெல்லிக்கு மாலை 4:10 மணிக்குக் கிளம்ப வேண்டிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம், ஏற்கனவே தாமதமாகி வந்த நிலையில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்கிருந்த ஸ்பைஸ்ஜெட் ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்துப் பயணி நோமன் ஷேக் கூறுகையில், விமானம் ரத்து செய்யப்பட்ட பிறகு தங்களுக்குத் தங்குவதற்கு எந்தவொரு ஏற்பாடும் செய்து தரப்படவில்லை என்றும், சாப்பிடவும் அரைகுறையாகச் சமைக்கப்பட்ட சாதமே வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலும் பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு இரவில் பயணம் செய்யவிருந்த பயணிகள் இதே போன்று விமான நிலையங்களில் தவிக்க விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்று பாக்டோக்ராவில் நிலவிய மிகவும் மோசமான வானிலை காரணமாக விமானம் கொல்கத்தாவிற்குத் திருப்பி விடப்பட்டதாகவும், இதனால் சரியான நேரத்தில் புறப்பட முடியாமல் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.

<a href=”http://

“>

வானிலை மாற்றங்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்றாலும், பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்திற்கும், பயணிகளுக்கு நேர்ந்த சிரமத்திற்கும் வருந்துவதாகவும், தங்களுக்கு ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.