டெல்லியில் கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சையத் என்ற பெண், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் காஷ்மீர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான பெண் டாக்டர் காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்படி, லக்னோவில் உள்ள ஷாஹீனின் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதுடன், அவரது குடும்பத்தினரிடமும் விசாரித்தனர்.
அப்போது, ஷாஹீனின் தந்தை செய்யது அகமது அன்சாரி, தனது மகளுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தமக்குத் தெரியாது என்றும், இந்தச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் டாக்டர் ஷாஹீன் குறித்து ஹரியானா போலீஸார் மேலும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானில் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் தாக்குதலில் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், கடந்த அக்டோபரில் ஜமாத்-அல்-மோமினா என்ற பெயரில் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தங்கை சாதியா அசார் இந்த மகளிர் பிரிவின் தலைவராக உள்ளார். சாதியா அசார், இந்தியப் பெண்களை இணையதளம் வாயிலாக மூளைச் சலவை செய்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாகவே டாக்டர் ஷாஹீன், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இந்திய மகளிர் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஷாஹீனுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
