தேசியத் தலைநகர் டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் செயல்பட்டு வந்த தங்கும் விடுதி (Paying Guest – PG) கட்டிடம் ஒன்று இன்று மதியம் 1:30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமாராக 50 கல்லூரி மாணவர்கள் வரை தங்கியிருந்த இந்த மூன்று மாடி கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரைமட்டமானதால், உள்ளே இருந்த பல மாணவர்கள் மற்றும் நபர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்த மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ​கான்கிரீட் கூரையின் கீழ் சிக்கியுள்ள நபர்களை மீட்க மீட்புப் பணியாளர்களுடன் சேர்ந்து அப்பகுதி உள்ளூர் மக்களும் முழுவீச்சில் போராடி வருகின்றனர். இதுவரையிலும் இடிபாடுகளுக்குள் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சத்ய நிகேதன் பகுதியில் பல பிரபலக் கல்லூரிகள் அமைந்துள்ளதால் அங்கு ஏராளமான பிஜி விடுதிகள் செயல்பட்டு வரும் சூழலில், இந்தத் திடீர் விபத்து மாணவர்களின் பாதுகாப்பைப் பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் அதேவேளையில், அருகில் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.