உபர் டிரைவருக்கும் பெண் பயணிக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும்  தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம், ஆண்கள் மீது தவறாக சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் பொதுமக்கள் இடையே மரியாதைமிக்க நடத்தை குறித்து பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு பெண் பயணி, தனது உபர் பயணத்தின் போது கார் பழுதடைந்ததால் பாதியில் பயணம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, ஓட்டுநரிடம் கடும் கோபத்தில் பேசுவதும், மிரட்டுவதும் காணப்படுகிறது.

அதாவது பயணத்தின் நடுவே வாகனம் தீவிரமாக பழுதடைந்ததால், ஓட்டுநர் பயணத்தை ரத்து செய்து, பெண் பயணியிடம் உபர் செயலியின் மூலம் பணத்தைத் திரும்பப் பெறலாம் என விளக்கினார். ஆனால், ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டதாகக் கூறிய பயணி, பணத்தை நேரடியாகத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

ஓட்டுநர், செயலியின் வழியாகவே பணம் திரும்ப வழங்கப்படும் என பணிவுடன் விளக்கியும், அந்தப் பெண் தொடர்ந்து திட்டி, மோசமான வார்த்தைகளில் பேசினார். அதுமட்டுமின்றி, மக்கள் முன்னிலையில் அடிப்பேன்   மிரட்டினார். இதை முழுவதுமாக தனது கைபேசியில் பதிவு செய்த ஓட்டுநர், அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை @DeepikaBharadwaj என்பவர் தனது X (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவின் கீழ், “பெண் பயணி அமைதியாக இருந்திருந்தால் இது தவிர்க்கக்கூடியது” என்ற வாசகம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இணையவாசிகள் பெரும்பாலோர் இந்த ஓட்டுநருக்கு ஆதரவு தெரிவித்து, பெண் பயணியின் முரட்டுத்தனமான நடத்தை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டல் கூறியதைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர், இது போன்ற சம்பவங்களைப்பற்றி காவல் துறையும் உபர் நிறுவனமும் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வீடியோ எங்கு, எப்போது பதிவானது என்பது தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. பாதிக்கப்பட்ட ஓட்டுநர் அல்லது பெண் பயணி இருவரும் போலீசில் புகார் அளித்தார்களா? அல்லது உபர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதா? என்பது குறித்தும் எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.