அகமதாபாத் நகரில் இன்று  நடைபெற்ற 148-வது ஜகந்நாதர்  ரத யாத்திரை நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. யாத்திரையில் பங்கேற்ற 18 யானைகளில் மூன்று யானைகள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காதியா பகுதி வழியாக ஓடியதால், பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த திடீர் சம்பவம் காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயத்தில் சாலைகளில் ஓடினர். “ஒரு நிமிடம் பக்தி உணர்வுடன் நின்றோம், அடுத்த நிமிடம் யானைகள் நேரே ஓடிவந்தன,” என பக்தர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து, காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் விரைந்து செயல்பட்டு யானைகளை கட்டுப்படுத்தினர். யானைகள் மேலும் பதற்றம் அடையாத படி விசில் ஊதுவதும் தடைசெய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. முதல்வர் பூபேந்திர படேல் யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்துடன் ஜமால்பூர் ஜெகந்நாதர் கோவிலில் மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டார்.

இந்த வருட யாத்திரையில் 101 அலங்கரிக்கப்பட்ட லாரிகள், 30 அகதாக்கள், 18 பஜனை குழுக்கள், 3 இசைக் குழுக்கள் உள்ளிட்டவை பங்கேற்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த ஆன்மிக நிகழ்வில் நிகழ்ந்த பரபரப்பு, சில நிமிடங்களுக்கு பக்தி வேட்கையை பயமாக மாற்றினாலும், அதிகாரிகளின் சீரான செயல்பாடால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.