தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை மணிப்பூர் மாநிலத்தில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த மாத இறுதியில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, ஆக்ரா ரெயில் நிலையத்தில் போலீசார் அதைப் பரிசோதித்தனர். அப்போது தலை மற்றும் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவர் ஒடிசாவைச் சேர்ந்த இதயத் நிஷா (38) என்பது அடையாளம் காணப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த சூட்கேஸை ஒரு ஆணும் பெண்ணும் தூக்கிச் சென்றதை மோப்பம் பிடித்தனர். அதன் அடிப்படையில் குடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தீவிர சோதனை நடத்தியபோது, அங்கே ஒரு பெரிய சமையல் பாத்திரத்தில் மேலும் பல உடல் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொடூரக் கொலையில் மணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மஜிக் ஆகியோர் முக்கிய சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தப்பியோடி தலைமறைவாகினர். தப்பியோடியவர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது முக்கிய குற்றவாளியான 22 வயது மணிக் உத்தீன் லஸ்கரை மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மாவட்டத்தில் உள்ள காஷிம்பூர் பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

“>

 

அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, முறையான அனுமதி பெற்ற பிறகு அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மனைவியைத் தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.