சென்னையில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திலிருந்து 120க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவர்களை விமானத்தில் பயணிக்க வைப்பதற்காக 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து டெல்லி அனுப்பி வைத்தோம்.

அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இந்த விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பெரியார் மண் அல்ல, பெரியாரே  ஒரு மண்ணுதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது குறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, நான் அவருக்கு பதில் சொல்வதே கிடையாது என்று ஒரே வார்த்தையில் உதயநிதி ஸ்டாலின் பதில் கூறினார்.