உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பர்சானா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹோட்டலின் ஒரு ஊழியர், கழிப்பறையில் அமர்ந்தபடியே உணவுப் பாத்திரங்களை கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உணவுண்ணும் ஹோட்டல்களில், சுகாதார விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி இந்த வீடியோ மூலம் மீண்டும் எழுந்துள்ளது.

உணவகங்களில் சுத்தம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்டவை கடைபிடிக்கப்படாமல், இப்படி ஒரு செயல் நடைபெறுவதால் பொதுமக்களின் உடல்நலம் பெரும் ஆபத்தில் உள்ளது. இதுபோன்ற செயல்கள் உணவகங்களின் மீது பொதுமக்களிடம் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பர்சானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஊழியரை கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் செயலுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதுடன், இந்த வீடியோவில் காட்டப்படும் செயல்கள் உணவகத்துறையின் ஒழுங்குமுறை மீறல் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.