கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அணுல் அன்சாரி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய அப்சரா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சிறுமி தனது தாயுடன் தேயிலை தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை அப்சராவை கடித்து இழுத்து சென்றது. இதனை பார்த்து அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்து சிறுத்தையை விரட்ட முயன்றார்.

அருகில் இருந்தவர்களும் கூச்சலிட்டனர். தொடர்ந்து மக்கள் சிறுத்தையை விரட்ட முன்றதால் சிறுமியை போட்டுவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. ஆனால் கழுத்து மற்றும் காது பகுதியில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அப்சரா உயிரிழந்தார். இது குறித்து அறிந்த வனத்துறையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.