மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாடு வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த பிரபல உணவகமான ‘டெல்லி ஸ்வீட் & பெல்புரி ஹவுஸ்’ கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர்  அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, உணவகத்தில் பொதுமக்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய வகையிலான கடும் சுகாதாரக் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, அங்குள்ள அசுத்தமான சாக்கடை மற்றும் தேங்கிய நின்ற நீருக்கு அருகில் சமோசா உள்ளிட்ட உணவுப் பண்டங்கள் ஆபத்தான முறையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது.

மேலும், குடிப்பதற்கும் சமையல் பணிகளுக்கும் எந்தவிதிகளிலும் வடிகட்டப்படாத அசுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வந்ததும் சோதனையில் அம்பலமானது. அதுமட்டுமின்றி, சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முப்பத்தாறு தொழிலாளர்களில் இருபத்தாறு பேரிடம் கட்டாயமாக இருக்க வேண்டிய முறையான மருத்துவச் சான்றிதழ்கள் கூட இல்லை என்பது கண்டறியப்பட்டது. உணவுப் பொருட்களில் முறையான லேபிள்கள் அல்லது காலாவதி தேதிகள் குறிப்பிடப்படாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இதுபோன்ற முறைகேடுகளைக் கடுமையாகக் கண்டித்துள்ள மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, அந்த உணவகத்தின் உணவு உரிமத்தை உடனடியாகத் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை அந்தக் கடையில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் போன்ற அனைத்து விதமான வணிக நடவடிக்கைகளையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.