
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞான சௌந்தரி(92). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இவரது வீட்டில் கரூரைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்தார்.
நேற்று அதிகாலை ஞான சௌந்தரி படுக்கையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த வேலைக்கார பெண் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி உறவினர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மூதாட்டி அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட 7 1/2 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டனர்.
பின்னர் மூதாட்டி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேலைக்கார பெண்ணான அன்னலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது நகைக்காக தலையணையால் அமுக்கி மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடி தனது மகன் பிரபுவிடம் கொடுத்து வைத்ததாக அன்னலட்சுமி கூட்டினார். அதன் அடிப்படையில் அன்னலட்சுமி, அவரது மகன் பிரபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 4 1/2 பவுன் தங்க நகையை மீட்டனர்.