ஐபிஎல் கிரிக்கெட் வீரர் சஷாங்க் சிங் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் சிங் ஆகியோர் மீது தங்களது வீட்டு சமையல்காரரை கொடூரமாக தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசி, சட்டவிரோதமாக சிறைவைத்ததாக போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இவர்களது குடும்ப ஓட்டுநரும் இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மெந்தோரி கிராமத்தில் உள்ள இவர்களது இல்லத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான சமையல்காரர் விபேந்திர சிங் தோமர் அளித்த எழுத்துப் பூர்வ புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் ₹15,000, தங்குமிடம், உணவு மற்றும் எதிர்காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி விபேந்திர சிங் வேலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், வேலைக்குச் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே உணவு சரியில்லை என கூறி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேலையை விட்டுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்ப விபேந்திர சிங் விரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஷாங்க் சிங் மற்றும் அவரது தந்தை, சமையல்காரர் யாருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதற்காக அவரது செல்போனைப் பறித்துக் கொண்டு கட்டாயப்படுத்தி வேலை வாங்கியுள்ளனர். இதில் இருந்து தப்பிக்க விபேந்திர சிங் தன்னை ஒரு அறைக்குள் பூட்டிக்கொண்ட போதிலும், தந்தை, மகன் மற்றும் ஓட்டுநர் ஆகிய மூவரும் சேர்ந்து கதவை உடைத்து அவரை கொடூரமாக தாக்கியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும்மருத்துவப் பரிசோதனையில் அவரது முகம் மற்றும் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.