பெங்களூரில் மென்பொருள் உருவாக்குநராக பணிபுரியும் ஒரு ஊழியர், தனது நிறுவனத்தின் ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கை முடிவுக்கு வந்ததால், மீண்டும் பெங்களூரு நகரத்திற்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அங்கு அலுவலகத்திற்கு அருகில் ஒரு சாதாரண 1 BHK வாடகை வீடு தேடிய அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்கள் ₹1.5 லட்சம் முன்பணமும், அதோடு அவரது ‘லிங்க்ட்இன்’ சுயவிவரத்தையும் சரிபார்ப்பிற்குக் கேட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அந்த ஊழியர், தனது மேலாளரிடம் நடந்த குழு கூட்டத்தில், “எனது சம்பளத்தில் பாதித் தொகை இந்த நகரத்தில் உயிர்வாழ்வதற்கே செலவாகிவிடுகிறது,
இதனால் நான் ஏன் எனது சொந்த ஊரிலிருந்தே வேலை செய்யக்கூடாது?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த மேலாளர், அவரது சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல், “இந்த நகரத்தில் வாழ உங்களால் செலவு செய்ய முடியாவிட்டால், நீங்கள் வேலையை விட்டு தாராளமாக விலகலாம்” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஊழியர், உடனடியாக அங்கேயே தனது வேலையை ராஜினாமா செய்தார். சமூக வலைத்தளமான X தளத்தில் பகிரப்பட்ட இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் நகரங்களின் அசாத்திய விலைவாசி உயர்வுக்கு ஏற்பச் சம்பளத்தை உயர்த்தாமல், ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி அலுவலகத்திற்கு வரவழைக்கும் நிறுவனங்களின் இத்தகைய போக்கு மிகவும் தவறானது என்று ஒரு தரப்பினரும், இந்த மந்தமான வேலைவாய்ப்புச் சந்தையில் வேலையை இழந்தது தவறான முடிவு என்று மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
