
புதுக்கோட்டை மாவட்டத்தின் மையப்பகுதியில் ராஜவீதி பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் ஒரு வாகனம் நீண்ட நேரமாக நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் சத்தம் போட்டும் அந்த வாகனத்தில் இருந்தவர் காரை விட்டு இறங்காமல் இருந்ததோடு வாகனத்தை அங்கிருந்து நகர்த்தவும் இல்லை. உடனடியாக பெண் போக்குவரத்து போலீஸான காயத்ரி பாய் அங்கு வந்தார். அவர் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக 2500 ரூபாய் அபராதம் விதித்தார்.
அது போலீஸ் வாகனமாக இருந்த போதிலும் அந்த பெண் போலீஸ் தன்னுடைய கடமை உணர்ச்சியில் நியாயமான முறையில் நடந்து கொண்டது பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு போலீஸ்காரர்களின் சொந்தக்கார் என்று கூறப்படுகிறது. மேலும் நேர்மை தவறாத அந்தப் பெண் போலீசின் நடவடிக்கை வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பாராட்டி வருகின்றனர்.