
மும்பையின் மலாட் பகுதியில் பல திருட்டுகளுக்கு காரணமான புத்திசாலி திருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் ககாரியாவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற முன்னா என்ற நபர், பகலில் சாதாரண நபராக நடித்து, இரவில் பெண் வேடத்தில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளார். சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் இருக்க ரயில் பாதையில் பெண்களின் உடைகளை மாற்றிக் கொண்டு திருட்டுக்குப் பின் மீண்டும் அதே வழியாக வெளியேறி விடுவதாக போலீசார் தெரிவித்தனர்.
மலாட், கண்டிவாலி, போரிவாலி, திண்டோசி ஆகிய பகுதிகளில் இவர் தொடர்ந்து திருட்டுகளை செய்து வந்துள்ளதுடன், மொத்தம் 8 வழக்குகள் இவருடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்டுள்ளது. போலீசார் அவரது வசம் இருந்த 36 கிலோ வைரம் பதித்த தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி, ₹13 லட்சம் வங்கிக்கணக்கில் இருந்த தொகை, தங்கம் உருக்கும் இயந்திரம், வீடு உடைக்கும் உளி, சுத்தியல் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அவர் பீகாரில் ₹10 லட்சம் மதிப்பில் நிலம் மற்றும் மாலவானியில் ₹6 லட்சத்தில் வீடு வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மலாட் போலீசார் மார்ச் மாதத்திலிருந்தே இந்த திருடனை தேடி வந்தனர்.
சுமார் 100-150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபின், ஒரு பெண் வேடத்தில் உள்ள சந்தேக நபரை அடையாளம் காண்பதிலிருந்து க்ளு கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி ரஞ்சித் குமாரை கைது செய்த நிலையில் அவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.